மன்னார் குஞ்சுக்குளம் கிராமமக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் மிகவும் குறைந்த அளவில் இருந்ததால் அவை பகிரப்படாது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக மடு உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்_க்குளம் கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தால் இந்தக் கிராமத்துக்கு படகுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவுப்பொருள்கள் முழுமையாக வந்தடையாததன் காரணத்தால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவற்றை திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார்.
முசலி பிரதேசத்துக்கு 35 படகுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவுப்பொருள்களில் குஞ்சுக்குளம் கிராமத்துக்குரியனவும் இருந்தன. ஆனால் மன்னார் மாவட்ட செயலகத்தால் எமக்கு தெரிவிக்கப்பட்ட தொகைகளையும் விட மிகவும் குறைவான உலர் உணவுப் பொருள்களே எம்மை வந்தடைந்தன. இதற்கு குஞ்சுக்குளம் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவற்றைத் திருப்பி அனுப்பி மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அவை தற்போது மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை மாவட்டச் செயலாளரிடம் திருப்பிக் கையளிக்கப்படவுள்ளன.
அதிகளவான நிவாரணப்பொருள்கள் மு\லிப் பகுதிக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும் தெரிவித்த குஞ்சுக்குளம் பங்குத்தந்தை இவை குறித்து உடனடியாக இடர் முகாமைத்துவ அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வர உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.